டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தக் கோரி காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக கனடா - ரொரண்டோ நகரில் வசிக்கும் சீக்கியர்கள் அல்லாத பிற இந்தியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் இவ்வாறான மிரட்டல்களைக் கண்டித்து வியாழக்கிழமை அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்திய மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை மீளப் பெற வலியுறுத்தி இந்திய விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இதுவரை இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுக்களில் எந்தத் தீா்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் கனடாவின் ரொரண்டோ நகரில் உள்ள இந்தியர்கள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி. ஜக்மித் சிங் ஆதரவளிப்பதாக கூறி ரொரண்டோ நகரில் வசிக்கும் சீக்கியர்கள் அல்லாத மற்ற இந்தியர்கள் ஜக்மித் சிங் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
நாங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் காலிஸ்தான் ஆதரவு போராட்டமாகி விட்டது. தற்போது அவர்கள் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை தாக்குகிறார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர்.
நாங்கள் வாக்களித்து தேர்வு செய்ய அரசியல்வாதிகள் எங்களை பாதுகாக்க தவறி விட்டார்கள். காலிஸ்தான் ஆதரவாளர்களை பாதுகாக்கிறார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.